அவர்தான்
அறிவைக் கொடுத்த இறைவன்.
நம்மை இத்தனை ஆண்டுகளாய்ச் சுமந்த இன்னொரு தாய்...
சுயநலமில்லாத சூரியன்.
வாழ்க்கையை அழகாய் வாழ்ந்து
காட்டிய முன்னுதாரணம்.
அன்பை வெளிக்காட்டிக்கொள்ளாத
அறிவுக்கடல்.
தாயின் கண்ணீரைக் கண்ட நாம்
தந்தையின் கண்ணீரை ஒருபொழுதும் காண
வாய்ப்பில்லை.
கண்ணீர் பிள்ளையின் எண்ணவோட்டத்தைப் பாதிக்கும் என
உணர்ந்த மிகச்சிறந்த
மன நல ஆளுநர்.
இறுதி வரை நம் பிள்ளை நம்மைச் சுமப்பான் என ஏங்கி,
இறுதிவரையும் நம்மைச் சுமந்தே
இறந்து போன சுமைதாங்கி.
வீரத்தைப் புகட்டுவதில்
தன்னிகரில்லாத
வீரன்.
என்னதான்
பிள்ளையின் வயசு
அவரை எதிர்த்து நின்றாலும்....
எந்த நிலையிலும்
தம் பிள்ளையை வெறுத்திடாத
தாயின் மறு உருவம்.
தம் பிள்ளையை நேரில்
திட்டித் தீர்த்தாலும்
வெளியில் விட்டுக் கொடுக்காமல் பேசும் வகையில்
சுயநலக்காரர்.
தம் பிள்ளை
சிறியதாய் ஒரு நல்லதைச் செய்துவிட்டால்
அதை
ஊர் முழுதும் சொல்லித் திரியும்
பைத்தியக்காரர்....
எப்படியெல்லாமோ
துன்பப்பட்டு
துவழாது
துவண்டாலும் தெரியாது....
நமக்காகவே
இறுதி வரை வாழ்ந்த
அப்பாவின்
தியாகம்...
அவர் போன பின்பே
புரிய வரும்.
ஆதலால்
தாயையும் தந்தையையும்
இருக்கும் பொழுதே வணங்குங்கள்.
இழந்த பின்பு அவரைப்
புகழும் நாம்
இருக்கும் பொழுதே புகழ்ந்தால்
இன்னும் ஓரிரண்டு ஆண்டுகள்
நம்மோடு சேர்ந்து வாழ்வார்கள்.
ஆதலால்
தாயையும்
தந்தையையும்
தயவு செய்து
இழந்த பின்பு தேடாதீர்கள்.
செம்மொழி சிபிராம்.