Header Ads Widget

Responsive Advertisement

நியாயம்தானா?



சென்னை
உன்னை என்னசெய்தது?
சொல் வானமே!
எங்களின் வங்கக்கடலைப்
பகலெல்லாம்
முகர்ந்து முகர்ந்து
வயிறு முட்டமுட்டக் குடித்ததெல்லாம்
என்னசெய்தாய்?
காற்றோடு பகையாகிப் போனாயோ?
இல்லை சென்னையைப் பகையாகக் கருதிவிட்டாயோ?
பிறகெதற்கு ஓரவஞ்சனையும்
கருமித்தனமும்
சின்னஞ்சிறு குண்டூசியின் குத்தும் முனைகள் போல
தேகத்தின் மீது லேசாகத் தூறுகிறாயே!
நல்ல மழையாகப் பொழியலாகாதா?
சென்னைவாசிகளின்
அத்தனை விழிகளும் நீவரும்வழி மீதே!
திறந்த பாத்திரங்களாய் நாங்கள் காத்திருக்க வானமே நீயேன் இன்னமும் மூடிய பாத்திரமாகவே இருக்கிறாய்!
கொட்டு கொட்டு
மாமழையாய்க் கொட்டு!
சொட்டுச் சொட்டாய்ச் சொட்டாமல் கட்டுக்கடங்காமல் கொட்டு!
காத்திருக்கிறோம் நாங்கள்!

த.ஹே
கோளூர்