Header Ads Widget

Responsive Advertisement

பூங்கா



யாரோ அழுகின்ற  சத்தத்தைக் கேட்கையில்

யாரென்று நானும் எட்டியே பார்க்கையில்

நான் தான் சகோ என்று சொன்னது பூங்கா.


மகிழ்ச்சிதேடி மக்கள் நாடிவரும் பூங்காவா

மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டு அழுது புலம்பி நிற்கிறது

ஆர்வமாய் நான் கேட்க பதில் சொன்னது பூங்கா.


விளையாடும் நோக்கத்தில் குழந்தைகள் வந்தனர்

குழந்தையோடு குழந்தையாய் விளையாடி மகிழ்ந்தேன் நான்.


நடப்பதற்கென்றே பெரியோர்கள் வந்தனர் 

நடைபாதையை அவருக்கு தானமாய்த் தந்தேன் நான்.


காதலர்களாக இளையவர் வந்தனர் 

காதலால் கனிந்து போய் வாழ்த்தியும் நின்றேன் நான்.


அந்தோ இன்றோ பிள்ளைகள் வருகின்றார்

காதல் என்ற பேரிலே கட்டியும் அணைக்கின்றார்.


பள்ளிச்சீருடையிலே பகலிலே வருகின்றார்

பார்க்கவே கூசிடும் செயல்களைச் செய்கின்றார்.


தாயாய் தந்தையாய் நான் அதைப் பார்க்கின்றேன்

தாங்க முடியாது கண்ணீர் வடிக்கின்றேன்.


எதிரிலே பெரியவர் இருப்பினும் பயமில்லை

பயம் வேண்டாம் மரியாதை சிறிது கூடக் கற்கவில்லை.


காதலிக்கப் பிறந்தவராய் தங்களை நினைக்கின்றார்

காதலென்றால் என்னவென்று தெரியாத வயதினிலே.


பூங்காவின் கதைகேட்டு நானும் தான் கலங்கினேன்

பொள்ளாச்சி நினைவு வர

பொள்ளாச்சி நினைவு வர

எனக்குள் நான் விம்மினேன்.


*சுலீ. அனில் குமார்* 

*கே எல் கே கும்முடிப்பூண்டி.*