Header Ads Widget

Responsive Advertisement

சில்லரை - சுகந்தீனா



முதியவரே
இத்தனை வயதில்
எத்தனை பொருளீட்டி
இருப்பீர்

அத்தனையும் இழந்து
இப்படி கைகளேந்தி
சில்லரை பெறுவது
ஏனோ?

கைப்பொருள்
அனைத்தையும்
கட்டியவளுக்கும் பெற்ற
பிள்ளைகளுக்குமென
கொடுத்துவிட்டு
பாசக்குழியில்
வீழ்ந்து கிடந்தீரோ

கட்டியவள்
இருந்திருந்தால்
கண்ணில் வைத்து
காத்திருப்பாளோ

எங்கே அவள்?

உம்மை விட்டுவிட்டு
காலத்தின் பிடியில்
கண்மூடி விட்டாளோ

பெற்ற மகனிடம்
கவனக்குறைவால்
மீதம் இருந்த
கைப் பொருளையும்
இழந்தீரோ

மகனுக்கு வந்தவள்
மதிக்கவில்லையோ

உழைப்பில்
வாழ்ந்தவரை
உரசிப் பார்த்து
விட்டார்களோ

பொறுத்துக் கொள்ள
முடியாமல் புறப்பட்டு
விட்டீரோ

இன்று சில்லரைக்காக கையேந்துவதன்
கரணியம் என்ன
முதியவரே

கரணியத்தை
கதைப்பீர்களானால்
கைக்கொடுத்து
தூக்கி விடுவதோடு
நாங்களும்
கவனமுடன்
இருந்துவிடலாம்
அல்லவா

✍️ கவிரசிகை.....
            ......சுகந்தீனா