Header Ads Widget

Responsive Advertisement

உனக்கு நன்றி!



ஏரியெல்லாம் நிரம்பவைத்த மழையே நன்றி!
.....ஏழுவண்ண             மாலைசூட  வந்தாய் நன்றி!
பேரிரைச்சல் ஆறுகளில் கேட்க வைத்தாய்!
......பாய்ந்துவரும் கணைகளென சீறி வந்தாய்!
காரிகையர் குடைமறுத்து நனைய நனைய
......குளிரான மழைக்காற்று தழுவ தழுவ
கூரம்புகள் பாய்தல்போல் வீழும் மழையே!
.....கூன்நிலவை மறைத்துநீ பெய்க மழையே!

மீனினங்கள் துள்ளிடவே மழையே வந்தாய்!
......மாண்டிருந்த குளங்களெலாம்  நிரம்ப வைத்தாய்!
வானின்று வழங்கிடவே மழையே வந்தாய்!
.....வாழையடி வாழையென பெய்யும் மழையே!
நானின்று மகிழ்ந்தேனே உன்னால் மழையே!
.....தேனமுதாய் மண்ணெங்கும் விழுந்த மழையே!
வானுக்கு எனதுநன்றி! மழையே வாழ்க!
.....வாரிவாரி வானம்தரும் மழையே நன்றி!

த.ஹே
கோளூர்