தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்
படித்தேன், எழுதினேன் பள்ளியில் அன்று.
எந்தப் பழக்கம் நினைத்து நான் பார்க்கிறேன்
எதுவும் நினைவில் வரவில்லை இன்று.
தாயற்ற பிள்ளையைப் பள்ளியில் பார்க்கையில்
மனத்தினில் அழுகிறேன் மௌனமாய் நானும்.
தந்தையின் பாசமே கிட்டாத குழந்தையைத் தவிப்போடு பார்க்கிறேன் பலநேரம் நானும்.
அரவணைக்க ஆளின்றி
விடுதியில் பிள்ளைகள்
பரிதாபப் படுகிறேன் பாசமுள்ள நானும்.
உணவுக்காய் சாய்பாபா கோயிலுக்குப் போகிறார்
உருகித்தான் போகிறேன் உணர்வுள்ள நானும்.
தொட்டிலில் தூங்கையில் இவ்வுணர்விருந்ததா?
என்னையே கேட்கிறேன் எதிர்பார்ப்பில் நானும்.
பெற்றோரின் அன்பினில் உற்றாரின் கனிவினில்
நினைத்திருப்பேனா
இதையெல்லாம் நானும்
நினைத்திருப்பாரா?
நினைத்திருப்பாரா?
தொட்டிலில் எவரேனும்.
*சுலீ. அனில் குமார்.*