Header Ads Widget

Responsive Advertisement

தெருவாசல்



தெருவாசல் தன்னையே திருவாசலாய் நினைத்து
ஒருகுடும்பம் போலவே
இருந்த நாட்கள் நினைவினில்.

தொலைக்காட்சி முன்னமர்ந்து தொப்பையைப் பெருக்காமல்
கதை பேசி விளையாடிக்
களித்ததும் நினைவினில்.

அழவைக்கும் தொடர்களின்
அவலத்தில் மூழ்காமல்
நட்புடனும் உறவுடனும் நலம் பகிர்ந்ததும் நினைவினில்.

என்வீட்டில் இச்சமையல்
உன்வீட்டில் எச்சமையல்
சமையலைப் பகிர்ந்துண்டு
மகிழ்ந்ததும் நினைவினில்.

வாசலின் முன்னாலே
சுவர் வந்து நின்றது,
திண்ணையும் வராந்தாவும்
காணாமல் போனது.

திறந்திருந்த மனம் அது போல் மூடித்தான் போனது
தெருவாசல் மறைந்துபோய்
கதவு மூடிக்கொண்டது.

உறவுகளும் நட்புகளும் ஒதுங்கியே நின்றது
ஒற்றுமையில் வேற்றுமையே
வாழ்க்கையாய் ஆனது.

*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*