Header Ads Widget

Responsive Advertisement

கிடைத்துவிட்டது



உடல் வியர்த்து கண் நிறைந்து தேடுகின்றாள் அவள்
மண்கிளறி கல்நீக்கி தேடுகின்றாள் அவள்
சென்று வந்த பாதையிலே ஓடுகின்றாள் அவள்
தேடிக்களைத்ததால் தளர்ந்து விட்டாள் அவள்.

பார்த்து நின்ற மக்களிலே கேட்கின்றார் சிலர்
தொலைத்துவிட்டுத் தேடுகின்ற பொருளதனின் பெயர்
கழுத்திலே அணிந்திருந்த சங்கிலியைச் சொல்கின்றாள் 
அவளுடன் சேர்ந்தவாறே தேடுகின்றார் பலர்.

இரண்டு பவன் சங்கிலியைக் காணவில்லை, ஒருவர்
நான்குபவன் சங்கிலியாம் சொன்னார் மற்றொருவர்
பவன் விற்கும் விலைதன்னில் இது என்ன கொடுமை
இழந்ததன் விலை தேடினர்
ஒருவருக் கொருவர்.

அனைவரையும் திரும்பவைத்து வந்தது ஓர் சத்தம்
'கிடைத்துவிட்டது' என்ற மாணவியின் சத்தம்
கிடைத்த பொருளைக் கண்டவரோ திகைத்தே தான் போனார்
பத்துரூபாய்ச் சங்கிலியைப் பார்த்து கோபமானார்.

இறப்பதற்கு முன் எந்தன் தாய் தந்த சங்கிலி
இருப்பதாய் நினைப்பதற்காய் எனக்களித்த சங்கிலி
தனிமையைத் தவிர்ப்பதற்கு எனக்குதவும் சங்கிலி
தாயிருப்பை எந்நாளும் எனக்குணர்த்தும் சங்கிலி.

சொன்னவாறே நன்றி சொல்லிக் கிளம்பிவிட்டாள் அவள்
கிடைத்து விட்ட பொருளதனின் மதிப்பறிந்த அவள்
பதில் கேட்டுக் கிளம்பிவிட்டார்
நின்றவர் பலர்
கிடைத்து விட்ட பதிலதனின்
உணர்வுணர்ந்த பலர்.

*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*