மழையை முன்னிட்டு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
நேற்றே வெளியிட்ட செய்தி!
இன்று விடியலிலிருந்தே
ஆரம்பமானது பிஞ்சுகளின் அலைபேசி அழைப்புகள்!
பிஞ்சுகளுக்கு இடைஇடையே சில
அழைப்புகள் பெற்றோரிடமிருந்தும்
தொடர்கதையாய் வந்தவண்ணமே
இருக்க காலைமுழுவதுமே
அலைபேசிப் பெண்ணானேன்!
டீச்சர் இன்று லீவுங்களா?எனக் கொஞ்சும் ஓருகுரல்!
எத்தனை நாளுக்கு லீவு விட்டாங்க?எனக் கெஞ்சிக் கேட்கும் ஒருகுரல்!
இங்கு நல்லமழை
கரண்ட் வேறு கட்டாகி தொலைக்காட்சி
காணாமல் தகவல் தெரியவில்லை!
அலைபேசியிலும்
மின்னேற்றம் இல்லை!என்று
சில பிஞ்சுகளின்
குரலில் சோகங்கள்
விஞ்சும்!
டீச்சர் வீடெல்லாம் ஒழுகல்! எனக்கோ காய்ச்சல் என்று சில பிஞ்சுகள் கதறும்!
வணக்கம்மா! இன்று விடுமுறைதானே?
என்று பவ்யமாய் பெற்றோரின் குரலும் அலைபேசியில் என்னை நாடிவரும்!
பிஞ்சுகளெல்லாம்
என் மாணவச்செல்வங்கள்!
மழைக்கால விடுமுறையில் ஒவ்வோர் வீட்டிலும் சோகங்கள்!
நானோ சென்னையிலே!
அவர்களோ தொலைதூரக் கிராமங்களில்!
மதியம் சத்துணவை நம்பிவரும் குழந்தைகள் இன்றென்ன உண்டனரோ? மழையணைத்த நாளினிலே அவர்கள் பசியணைத்த விவரத்தை எப்படிஅறிவேன்?
அரசுபள்ளி ஆசிரியரின் அனுபவங்கள் இவை!
த.ஹேமாவதி
கோளூர்