ஒருவேளை உணவாவது கிடைக்குமே என்றே
பள்ளிக்கு அனுப்பினர் பெற்றோர்கள் அன்றே
கட்டணம் கட்டக் காசில்லை என்பதால்
அரசுப் பள்ளியில் படித்தோம் நன்றே.
நாங்களும் படிக்கிறோம் நம்பிக்கை வந்தது
எதிர்காலக் கனவுகள் எதிரிலே தெரிந்தது
அனைத்துமே நிறைவேறாக் கனவாகிப் போகுமா?
நேரலை வகுப்புகள் நிரந்தரமாய் ஆகுமா?
அன்றாட உணவிற்கே திண்டாடி நிற்கையில்
வசதியுள்ள பிள்ளைபோல் அலைபேசி கிடைக்குமா
அடிப்படைக் கல்வியும் இல்லாமல் போகுமா
எம்குறை உரியவர் செவிகளை எட்டுமா?
*கிராத்தூரான்*