இல்லாதோர் உண்பதற்காய்,
இயலாதோர் வாழ்வதற்காய்
திறந்தார்கள் கடைகள்
நியாயவிலைக் கடைகள்.
நல்லதோர் எண்ணம் தான்
உயர்ந்து நின்றது கடைகள்
இலட்சியம் நிறை வேற்றத்தான்
எதிர் கொள்கிறது தடைகள்.
விலைமட்டும் நியாயமாக
தரமோ அநியாயமாக
அளவோ படு மோசமாக
அதுவே அடையாளமாக.
ஏழைகள் வீட்டிலே
எரிய வேண்டும் அடுப்பு
பட்டிணிக்கும் பசிக்கும் என்றும்
அளிக்க வேண்டும் விடுப்பு.
நியாயவிலைக் கடைகள் தான்
அதற்கு நாளும் துடுப்பு
எண்ணமெல்லாம் தகர்ந்ததனால்
வருகிறது ஓர் மடுப்பு.
இலட்சியத்தில் கவலையில்லை
இலட்சாதிபதியும் வரிசையில்
ஏழைகளின் அரிசி இன்றோ
பிற மாநிலச் சந்தையில்.
இலவசத்தின் பிறப்பிடம் நான்
கடை சொல்கிறது பெருமையில்
தவறுகளின் இருப்பிடம் நான்
பறைசாற்றுகிறது உச்சத்தில்.
அனைவரும் இங்கு ஏழைகள்
சாட்சி சொல்லுகிறது நேரத்தில்
நியாயம் மட்டும் தலைகுனிந்துக்
குறுகி நிற்கிறது வெட்கத்தில்.
நியாயம் மட்டும் தலைகுனிந்துக்
குறுகி நிற்கிறது வெட்கத்தில்.
*கிராத்தூரான்*