தேன்கூடாய் முகில்கள் மாறியதென்ன!
தேனென மழைதான் மண்ணிலே வீழ்வதென்ன!
தேன்சிந்தும் வானுக்கு நன்றிசொல்ல தாவரங்கள் தலையாட்டி மகிழ்வதென்ன!
புத்தம்புது காட்சியாக உலகம் மாறுவதென்ன!
நீர்நிலைகள் மேனியெல்லாம் செழித்தே சுழித்தாடுவதென்ன!
மழைத்துளிகள் தீண்டுகையில் தேகம் சிலிர்ப்பதென்ன!
அச்சிலிர்ப்பாலே இதயங்கள் களிப்புறுவதென்ன!
மழைநீரில் தலைநீராடி புதுமெருகுக் கூடிய
தாவரங்கள் மழைக்காற்றோடு கைகோத்து ஆடுவதென்ன!
ஆனந்தமிகுதியால் பூப்பூவாய்ச் சிரிப்பதென்ன!
மழைமுகங் கண்ட உழவர்கள் ஆனந்தக் கூத்தாடுவதென்ன!
பசும்புல்லும் மழைநீரில் நீந்திமகிழ்வதென்ன!
தேனாக மழையது வழியவழிய சில்லென்ற குளிர்த்தென்றல் எங்கும் நிறைவதென்ன!
ஆகா!
எல்லாமே மழையின் அற்புதமே! வான்சிந்தும் மழையின் மாட்சியே!
த.ஹேமாவதி
கோளூர்