மேகம் பொதிந்து வைத்த
வைரமாய் ஒளிர்கின்ற
வெண்ணிலவே!
குளிர் காற்று உனைத்தீண்ட
கோபம் கொண்டாயோ?
ஒளிய நினைந்தாயோ?
சீரான வானத்தில் நீ அசையாது
சிலையாக நின்றது ஏன்?
சூரியனின் ஒரு பெருமூச்சுக்கு
சூழ நிற்கும் உயிர்கள் வாடி
விடுத்த வியர்வைத் துளிகளும்......
வெப்பக் கொப்புளங்களாக
வெடித்து வழியும் வேதனையை
உன் மென்கிரணக் கரம் கொண்டு
நீவி விட மனமுண்டோ
சொல் நிலவே?
நாளெல்லாம் பாடுபட்ட உழைப்பாளி
களைப்போடு வரும் நேரம்
தாயென உன் தளிர் கரத்தால்
தொட்டாலே போதும் பசிமறந்தே
காலைவரை கண்ணயர்ந்தே
தூங்குவான் கவலைநீங்கியே!
🌹வத்சலா🌹