ஊருக்கு நடுவே நாட்டாமையைப்போல்
கர்வமாய் இருந்தது அந்தக் கிணறு.
வீட்டுக்கு அருகே இருந்ததனால் அது
என்றுமே எங்கள் சொந்தக் கிணறு.
கிணறுக்கு நிலமளித்த பெருமையுடன் கர்வமுடன்
நீர் இறைத்து மகிழ்ந்ததோ குடும்பத்தின் பேறு.
கொதிக்கின்ற கோடையிலும் நீர் இருக்கும் என்பதனால் கவலையின்றிப் பொறுத்திருக்கும் கண்ணியமாய் ஊரு.
சாதிமத பேதமின்றி இனம்கடந்து மொழிகடந்து
அனைவருக்கும் அள்ளி நீரை அளித்ததந்தக் கிணறு.
ஊர்மக்கள் நிலை உயர்ந்து வீடுதோறும் கிணறு வந்து
வீட்டு மேலே தொட்டி வந்து மறக்கப் பட்டது கிணறு.
காத்திருந்த ஊர் முழுதும் நன்றி கெட்டுப் போனபின்னும்
தன் நிலையில் மாற்றமின்றி இருக்குதின்றும் கிணறு.
என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற எண்ணமுடன் தண்ணீருடன் இன்றுமந்தக் கிணறு
கிராத்தூர் பஞ்சாயத்துக் கிணறு.
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*