புத்தகத்தில் மயிலிறகு குட்டிபோடவில்லை
குட்டிபோடா மயிலிறகு ஆண் என்றான் நண்பன்.
குட்டி போடும் மயிலிறகு எங்கே? நான் கேட்க
உடைந்து விட்ட மயிலிறகைக் காட்டினாள் என் தோழி.
ஆண் இறகும் பெண் இறகும் சேர்த்துவைத்ததாலே
குட்டி ஒன்று பிறந்ததென்று விளக்கினான் என் நண்பன்.
ஆண் இறகோ பெண் இறகோ குட்டி போட்ட மயிலிறகோ
எதுவொன்றும் தெரியாமல் திகைத்து நின்றேன் நானும்.
தீக்காயம் பட்டநேரம் குளிர்ச்சியான மருந்தொன்றை புத்தகத்தில் வைத்திருந்த மயிலிறகில் தொட்டெடுத்து
தீ தந்த காயத்தில் தடவிவிட்டாள் என் அன்னை.
மயிலிறகின் மென்மையோ தாயன்பின் குளிர்மையோ
நினைத்தாலே இனிப்பாக மறக்காத சுகமாக
மயிலையோ இறகையோ பார்க்கையிலே நினைவாக
நினைக்கையிலே நினைக்கையிலே
இருக்கிறது சுகமாக.
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*