*
கஜா புயலில்
குலைகளுடன் வீழ்ந்த தென்னைகளைக் கண்டே பதறினோமே கதிகலங்கினோமே!
இன்றோ
இராணுவத்தில்
குலைசாய்ந்ததுபோல்
நாற்பத்துநான்கு வீரரை
இன்று பறிகொடுத்து நிற்கின்றோம்!
வீரமரணத்தில் தலைவனை இழந்த மனைவிகளுக்கு
என்ன ஆறுதல் தரப்போகிறோம்?
வீரமரணத்தால் தந்தையை இழந்த குழந்தைகளை
எப்படி சமாளிக்கப் போகிறோம்?
வன்முறைத் தாக்குதலால்
கண்மூடிய வீரர்கூட்டம்
இதற்கெல்லாம்
யாது காரணம்?
தேசங்காக்கப்
புறப்பட்ட சிங்கங்கள் இன்று
சவப்பெட்டிகளில்
திரும்பிவருகின்றன
தத்தம் சொந்தமண்ணுக்கு!
இருபத்தோர் குண்டுகள் முழங்க
இராணுவ மரியாதை!
மலர்வளையங்கள்
மூவண்ணக் கொடி போர்த்தல்
பொதுமக்கள் அஞ்சலி!
ஆனாலும் ஆறுமா மனம் தேறுமா
கண்கள் சும்மா இருக்குமா
இதயம் சமாதானமடையுமா
அடியற்ற மரம் சாய்ந்தால் கூட
நிமிர்த்திவைத்தால்
துளிர்க்குமே
இவர்களை இழந்து தவிக்கின்ற குடும்பங்களில்
மகிழ்ச்சி திரும்புமா?
த.ஹேமாவதி
கோளூர்