Header Ads Widget

Responsive Advertisement

முகவரி தேடி - அனில்குமார்


தொலைத்துவிட்ட முகவரியைப் பலதூரம் தேடிவிட்டு சலித்துப்போய் நிற்கின்ற  மரங்களின் வேர்கள்.


நீர்த்தடங்கள் எங்கே என ஓடி ஓடிப் பார்த்துவிட்டு நிலத்தடத்தில் அடைக்கலமாய் விண்ணின் மழைத்துளி.


பெற்றெடுத்த மகராசி விட்டுவிட்டுப் போனபின்னும் முகவரியைத் தேடி நிற்கும் அனாதைக் குழந்தைகள்.


வருகிறேன் என்று சொல்லி விட்டுச்சென்ற செல்லமகன்

முகவரியைத் தேடி நிற்கும்

முதியோர் இல்ல பெற்றோர்கள்.


உன் உயிராய் நான் இருப்பேன் என்று சொல்லி நம்பவைத்து 

விற்றவனின் முகவரியைத் தேடி நிற்கும் விலைமாதர்.


கற்றுக்கொடுப்பவரை மதிக்கின்ற சமூகத்தில் வாழ்வதற்கோர் முகவரியைத் தேடி நிற்கும் ஆசான்கள்.


மூலஸ்தானம் எதுவென்று முடிவுசெய்ய முடியாமல் குழம்பி நிற்கும் திருடப்பட்ட மூலவர் சிலைகள்.


அனைத்திற்கும் தீர்வுகாணும் சிறப்பானதோர் முகவரியைத் 

தேடுகின்றேன் நாடி நிற்கும் பலரோடு நானும்.


*சுலீ அனில் குமார்*

*கே எல் கே கும்முடிப்பூண்டி*