பகலென்றும் இரவென்றும் ஒருநாளை இறைவன் இரண்டாய் வகுத்தான்!உழைப்புக்குப் பகலையும் உறக்கத்திற்கு இரவையும் உரித்தாக்கினான்!
காரிருள்நேரமே
நாளின் கடைசிஓரம்! புதுவிடியலை வரவேற்கத் தயார்படுத்தும் நேரம்!
விழியென்ற மலரைக் குவித்து இரவெல்லாம் உறங்கினால்தான்
விடியலிலே
புதுமலராய் விழிகள் மலரும்!
உறக்கத்தில் உண்டு பலவிதங்கள்!
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு விதங்கள்!
கடுமையாக உழைப்பவருக்கு
படுத்தவுடனே தூக்கம்!
செல்வம்படைத்தப் பலருக்கோ
படுத்தும் வருவதில்லை தூக்கம்!
சிலருக்கு மாத்திரை
விழுங்கினால்தான்
உறக்கம் அவர்களை விழுங்குகிறது!
வயதானவர்களுக்கும்
நோய்வாய்ப் பட்டவர்களுக்கும்
தூக்கம் என்பது அரிதாகும்!
காதலில் வீழ்ந்தோரெல்லாம்
உறக்கத்தில் வீழ்வதில்லை!மாறாக நினைவுகளில் மூழ்கிட விடிந்தும்விடுகிறது!
சிலருக்கு தூக்கமே
ஆக்கம்!
சிலருக்கோ தூக்கம்
ஓர் ஏக்கம்!
காரிருளில் ஆழ்துயிலில் வீழ்வோம்!காலையிலே புத்துணர்வாய் எழுவோம்!
த.ஹேமாவதி
கோளூர்