Header Ads Widget

Responsive Advertisement

காவியக் காதல்



*மெய்யெழுத்தாய்* அவள்!
*உயிரெழுத்தாய்* அவன்!
விழிகளின் சங்கமத்தில் இருவரும் ஒன்றிட
*உயிர்மெய்* எழுத்தானார்கள்!
அவன் பேச்செல்லாம்
*மெல்லினம்* என
அவன் ரசித்தான்!
*இடையினமாய்* அவன் அவளிடம் எல்லைமீறுகையில்
*வல்லினமாய்* அவள் கடிந்துக் கொண்டாள்!
*பூப்பெயர்முன் மெல்லினம் மிகுதல்* போல
அவளின் பூவிரல்களை அவன்விரல்கள் பிடிக்கையில்  வெட்கம் அவளிடம் மிகுந்தது!
*சொல்பொருள்  பின்வருநிலையணியாய்*
இருவரும் அவரவர் பெயர்களை
மாற்றிமாற்றி திரும்பதிரும்ப
நாமகிழ சொல்லிசொல்லி இன்பங் கொண்டனர்!
*மொழிமாற்றுப் பொருள்கோளாய்*
இதயங்களை மாற்றிக் கொண்டனர்!
கண்களால் தொடங்கி *குறள்வெண்பா* போலிருந்த காதலை
*நிலைமண்டில ஆசிரியப்பாவாய்*
நீண்டு வளர்த்தார்கள்!
*எழுத்தாயிருந்த* இருவரும் *அசை* ந்து மனம்மாற
சீரான *சொல்லாகி*
*யாப்பாகி* *அணியாகி*
ஒருவருக்குள் ஒருவராய் இதயத்தே ஒன்றாகி அவள்அவனாய் அவன்அவளாய்
*திரிதல் புணர்ச்சி* ஆனார்கள்!இதனால் இருவரிடையே காதல் என்ற *பெருங்காப்பியம்* உருவானது! அழியாதது தமிழ்மொழி மட்டுமல்ல தங்கள் காதலும் என்பதை உணர்ந்துக் கொண்டார்கள்!

*த.ஹேமாவதி
*கோளூர்