நேரிய பாதையில்
நாளும் செல்கையில் மோதிடும் தடைபல
கண்டாலும் மனமே அச்சம் தவிர்!
தான்கொண்ட கருத்தை
கூறிடும்போது
ஓங்கியே எதிர்க்குரல் வந்தாலும் மனமே அச்சம் தவிர்!
மாபெரும் தவறுகள் செய்திடும் மனிதன் ஆள்பலம் பணபலம்
கொண்டிருந்தாலும்
தட்டிக்கேட்க தயங்காதே மனமே அச்சம் தவிர்!
அநீதிஇழைத்தவன் மூவேந்தருள் ஒருவனெனத் தெரிந்தும் எதிர்த்து வழக்காடிய கண்ணகியைப் போல் மனமே நீதியை நிலைநாட்ட அச்சம் தவிர்!
போதையின் பாதையில் மனிதனை இழுக்கும் மதுபானக்கடைகள்
அரசுடைமை ஆனாலும் மனமே எதிர்த்து நின்று இழுத்துமூடவேண்டாமா?அச்சம் தவிர்!
தமிழைப் பேசு! தமிழில் கல்விபயில்!தமிழில் பெயரிடு!
பாரதியைப் படி!
குறள்வழி நடைபோடு!பிறகென்ன எதையும் தாங்கும்வல்லவன் ஆவாய்!மனமே அச்சம் தவிர்!
நெகிழியைப் புறக்கணி!
மரங்களை அதிகம் நடு!
இயற்கையை நேசி!
உலகம் பாதுகாப்பாகும்.மனமே அச்சம் தவிர்!
புகையும் மதுவும் தூரவிரட்டு!
இல்லற தர்மம் கடைப்பிடித்தொழுகு!
தீராநோய் வருமோ உயிர்நீங்குமோ என்ற அச்சம் தவிர்!
ஔவையின் ஆத்திச்சூடியைப் பயில்!
பாரதியின் புதிய ஆத்திச்சூடியைப் பழகு!
எதற்கும் எங்கும் எவருக்கும் பயப்படத்தேவை வராது.மனமே அச்சம் தவிர்!
த.ஹேமாவதி
கோளூர்