பஞ்சத்தில் இருந்தபோதும்
கொஞ்சமாக உண்டபோதும்
நஞ்சை அன்று உண்ணவில்லை நெஞ்சை அது அடைக்கவில்லை.
சத்தான உணவென்றுப்
பத்து பேர்கள் சொன்னார்கள்
பத்து பேர்கள் சொன்னதனால்
சத்தென்று நினைத்தார்கள்.
சுத்தமான உணவுதானா
ஆராய மறந்தார்கள்
ஆராயாது உண்டவர்கள்
அல்லல் பட்டு நின்றார்கள்.
இருப்பதை விட்டு விட்டுப்
பறப்பதை விரும்புதல் போல்
இயற்கையை விட்டு விட்டுச்
செயற்கையில் மகிழ்ந்தார்கள்.
கோடீஸ்வரன் பெயர் இருக்கும்
பிச்சை பெற்று வாழ்ந்திடுவார்
பிச்சை என்ற பெயர் கொண்டோர்
லட்சாதிபதி ஆயிருப்பார்.
பெயரில் மட்டும் சத்திருக்கச்
சக்கையாக உணவிருக்கும்
சக்கையோடு சர்க்கரையைச்
சேர்த்த சத்து தானிருக்கும்.
தானியங்கள் உண்டவர்கள் தானியங்கி ஆயிருந்தார்
தரமறிய மறந்தவர்கள்
தாங்கி நிற்க மருந்துண்டார்.
நாவுக்கு ருசியிருக்கும்
சாவுக்கு வழிவகுக்கும்
இயற்கையான சத்துணவு
உண்பவர்கள் வாழ்வினிக்கும்.
இதை உணர்ந்தவர்கள் வாழ்வினிக்கும்.
*கிராத்தூரான்*