தயக்கமின்றி முன்னேறித் தடைகள் தகர்த்தெறிந்திட,
மயக்கு மொழி கேட்டு அதில் மயங்காமல் விழித்திட,
வியக்கும் செயல் செய்து பிறரை வியந்து பார்க்க வைத்திட,
மனதில் உறுதி வேண்டும், அதுவும் இறுதி வரை வேண்டும்.
எள்ளி நகையாடுவோரைக் கிள்ளியே எறிந்திட,
தள்ளி நிற்கச் சொன்னவர்கள் உன் பெருமை அறிந்திட,
பள்ளியறைப் பாடம் சொல்லத் துணியும் பிறர் அதிர்ந்திட,
மனதில் உறுதி வேண்டும், அதுவும் இறுதி வரை வேண்டும்.
ஏய்த்து வாழும் எத்தர்கள் எட்டியே நின்றிட,
உழைத்து வாழ விழைபவர்கள் ஒட்டியே நடந்திட,
குழைந்து வாழும் கோழைகள் ஓடியே ஒளிந்திட,
மனதில் உறுதி வேண்டும், அதுவும் இறுதி வரை வேண்டும்.
நினைத்ததை முடித்திட, முடித்ததைத் தொடர்ந்திட,
இழந்ததை எடுத்திட, எடுத்ததைக் காத்திட,
எதிர்ப்பதை உரைத்திட, உரைத்ததில் நிலைத்திட
மனதில் உறுதி வேண்டும், அதுவும் இறுதி வரை வேண்டும்.
மனதில் உறுதி வேண்டும், அதுவும் இறுதி வரை வேண்டும்.
*கிராத்தூரான்*
*சுலீ. அனில் குமார்*