விபத்தொன்று நடக்கிறது
விரைபவர்கள் நிற்கவில்லை,
உயிரொன்று துடிக்கிறது
உதவி செய்ய யாருமில்லை,
பார்த்து நின்ற பலரும்கூட
படம்பிடிக்கும் மும்முரத்தில்,
ஓர் ஊர்தி வந்து நிற்க
ஒருவர் இறங்கி ஓடுகின்றார்,
துடிக்கின்ற அவ்வுயிரை தோளினிலே சுமக்கின்றார்,
உதவி தேடி நிற்காமல் ஊர்தியிலே விரைகின்றார்,
உதிரத்தைக் கொடுத்தந்த உயிரைக் காப்பாற்று கின்றார்,
உயிர் பிழைத்த அவ்வுள்ளம் உறவுக்குச் சொல்கிறது
மனிதனும் தெய்வமாகலாம்
மனிதநேயம் இருந்திடில்.
ஒரு பாட்டி கை நீட்டி உணவுக்காய் நிற்கையிலே
உதவும் உள்ளம் அற்றவர்கள் பார்க்காமல் செல்கின்றார்,
பசிதாங்க முடியாமல் அப்பாட்டி விழுந்தபோதும்
ஏன் என்று பார்க்காமல் எல்லோரும் செல்கின்றார்,
ஒருவர் மட்டும் ஓடிவந்து மயக்கத்தைத் தெளியவைத்து
உணவளித்து தன்னுடனே அழைத்துக் கொண்டு செல்கின்றார்,
தன்னைப்போல் பல பேரை பாட்டியங்கு காண்கின்றார்,
மகிழ்ந்து பார்த்த அப்பாட்டி மனதினிலே சொல்கின்றார்
மனிதனும் தெய்வமாகலாம்
மனிதநேயம் இருந்திடில்.
ஆம்
மனிதனும் தெய்வமாகலாம்
மனிதநேயம் இருந்திடில்
மனிதனாக வாழ்ந்திடில்.
*சுலீ. அனில் குமார்.*