விளக்கு ஏற்றினால்.....
புவி ஈர்ப்பு விசை எதிர்த்து
மேல் நோக்கி எரியும்
மண் நோக்கி வீழாமல் விண் நோக்கி உயரும்
விழுதலல்ல எழுதல் வேண்டும் பாடமது புரியும்
உயர்வுதான் வாழ்வினில் சொல்லாமல் சொல்லும்.
இருளென்ற பேய் அதோ
இல்லாது ஒழியும்
ஒளியென்ற தெய்வமோ
வீடெங்கும் நிறையும்
சதிகாரர் சதி எல்லாம் இருளோடு மறையும்
விதி ஒழிந்து மதி சிறந்து கதி உயர்ந்து தெளியும்.
கல்லாமை இருளகற்ற கல்வி விளக்கேற்று
இல்லாமை தனை அகற்ற செல்வ விளக்கேற்று
கோழைகள் அழிந்தொழிய வீர விளக்கேற்று
விவேகம் நனி சிறக்க அறிவு விளக்கேற்று.
மயக்கத்தில் இருக்கிறார்கள் பாரதத்தில் மக்கள்
தயக்கத்தில் இருக்கிறார்கள் அறிவுநிறை மக்கள்
கலக்கத்தில் இருக்கிறார்கள் கல்விகற்ற மக்கள்
பிறர் விளக்கு ஏற்றினால்
பிறர் விளக்கு ஏற்றினால்
ஒளி காண்பர் மக்கள்
ஒளியேற்ற பிறர் வருகை காத்திருக்கும் மக்கள்.
*சுலீ. அனில் குமார்.*