விழியசைவில் என்னைக் கிறங்கடிப்பாள்!
மொழியின்றியே
உரையாடுவாள்!
மீசைமழிக்கையிலே
சரிபார்ப்பாள்!
பார்த்து பார்த்துப் பரிமாறுவாள்!
குளிக்கையிலே முதுகைத் தேய்த்திடுவாள்!
எனக்காக இறைவனை வணங்கிடுவாள்!
பாதங்களில் வீழ்ந்து
என்னையும் வணங்கிடுவாள்!
எத்தனை மாதங்கள் ஆனது இவையெல்லாம் நடந்து!
இதோ கிடைத்துவிட்டது விடுமுறை
இருநாட்கள் இடையிலே
பிறகென்ன அவள் என் மடியினிலே
என்றெல்லாம் ஏங்கியனாய்
எப்படி போனதோ இருதினங்கள்
வந்துவிட்டான் தாயகம்
கண்டுவிட்டான் மனைவியை
சுற்றிலும் உறவுகள்!
பலமாதங்கள் பிரிந்திருந்த ஏக்கம்!
விழிகளால் உணர்வுகளைப் பரிமாற்றிக் கொண்டார்கள்!
உடனடி வடிகாலை அமைத்துக் கொண்டார்கள்.
த.ஹேமாவதி
கோளூர்