அசத்தியத்தை சத்தியமாக்க
உதவிய சிட்டுக்குருவிகளே!
அன்றாடம் நான் இறைத்திடும்
குருணி அரிசிக்காக
கூட்டங்கூட்டமாய் வருவீரே!
நான் பிறந்த மண்ணில் தொலைத்த
உம்மை இங்குதான் கண்டடைந்தேன்!
கருகமணிக்கண்கள் துருதுருத்து.....
கழுத்தசையும் வேகத்தில்
கால்மாற்றி வேலிதாவி நீங்கள்
ஆடிவந்த ஆட்டம் என்றும் என்
கருத்தை விட்டகலாது!
இன்றைக்கான் உம் சீரை
இறைத்து விட்டு கிளம்பி விட்டேன்!
நாளைக்கு நீவீர் வந்தால்
எனைத்தேடியே அலைந்து
ஏமாந்து போவீரோ?
தேடித்தேடியே மனம்
சோர்ந்துதான் நிற்பீரோ?
என்னோடு உம்மையும்
கூட்டிவர ஆவல் மிகவும் உண்டு!
கூடுகட்டி நீர் வாழ்ந்திட
இங்கே வனமுமில்லை உமை.....
வாழவைக்க யார்க்கும் மனமுமில்லை!
சுதந்திரமாய் நீர் வாழ உமது இடம்
சத்தியமாய் ஈடு இணையில்லை!
மனம் தேற்றி அங்கேயே வாழுங்கள்!
தென்றல் வந்து எனது
தேகம் தொடும் நேரமெல்லாம்......
உம் நினைப்பு மட்டும் நெஞ்சத்தில்
உண்மையாய் வாழட்டும்!
விடை தருவீர்களா சிட்டுக்குருவிகளே?
🌹🌹வத்தலா🌹🌹