அம்மா உம்மைப் பற்றி சொல்ல இந்த ஓர் நாளும் போதுமோ
பூமி மேலே வீடொன்று கட்டி அதிலிருந்து சம்பாதிக்க நினைக்கும் மனிதர் மத்தியிலே
கொத்தனாரும் பொறியாளரும் இல்லாமல் கல்லு மண்ணும் ஏதுமின்றி
உம் வயிற்றில் அழகானதோர் வீட்டை இரத்தத்தாலும் சதையாலும் ஆக்கித் தந்து ஈரைந்து திங்கள் என்னைச் சுமந்தவளே
நீர் எனக்கு உணவுத்துறை அமைச்சராயிருந்து ஊட்டமுள்ள சத்தான உணவைத் தந்தாய்
நல்ல இசையமைப்பாளராய் இருந்து இனிய இசையை கேட்க செய்தாய்
நல்லதொரு ஆசிரியராயிருந்து நல்லன அனைத்தையும் கருவிலேயே கற்றுத் தந்தாய்
நல்ல தோழனாய் தோழியாய் இருந்து என்னுடன் நட்பு பாராட்டினாய்
நல்ல சுற்றுலாத்துறை அமைச்சராயிருந்து இயற்கை காட்சிகளை உம்மூலம் என்னைக் காண வைத்தாய்
நல்ல வெளியுறவுத்துறை அமைச்சராயிருந்து வெளியுலக நிகழ்ச்சிகளை உம்மூலம் எனக்கு அனுப்பிக் கொண்டே இருந்தாய்
நல்ல ஓர் செவிலியராய் நான் உண்டானது முதல் வெளியுலகைக் காணும் வரை அன்பாக பராமரித்த தாயே
நான் கருப்பென்றும் சிவப்பென்றும்
குட்டையென்றும் நெட்டையென்றும் அறியாத போதினிலே
எப்படியிருந்தாலும் என் மகள் என் மகள் என்று பூரித்த தாயே
காணாத உருவை கண்டு விட்ட சந்தோசத்தில் வலியெல்லாம் மறந்து வாரியணைத்த தாயே
உம்பேரு சொல்ல நானிருக்க
என்னோடே நீ இப்ப இல்லையே
நான் பிறந்து வந்த இருட்டறைக்கே
மீண்டும் சென்றது போலாச்சே என் நிலைமை
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நானுனக்கு மகளாக. பிறக்கின்ற வரமொன்றே போதும் தாயே
தி.பத்மாசினி