Header Ads Widget

Responsive Advertisement

ஆத்தாளே காத்தருளு!!



✍கதிரறுக்க போகயில

களையெடுக்க போகயில

கருவாயிருந்த நா

கறுப்பாயிடுவேன்னு

கருத்த உன்வயித்துக்கு

கந்தலுல பந்தலிட்டு

கருகாம காத்தவளோ..


✍கஞ்சி கெடக்காம

காஞ்சிபோன காலத்துல

எங்கப்பன் செய்யலன்னு

உங்கப்பன

ரேசனரிசி கேட்டு

ரோதன செஞ்சவளோ..


✍ஒண்ணாந்தேதி

வரப்போற

ஓடம்போறப்புக்கு

கடனா வாங்குன

வெதநெல்ல

வேகவைக்க

வேணுமுன்னு

எங்கப்பன் வேண்டுமுன்ன

பதமான வெதநெல்ல

பச்சரிசி சோராக்கி

அயரமீனோட

அய்யனாருக்கு

படயலிட்டு

அடிவயிர தடவி 

அப்பவிட்டாலென்ன

ஆத்தாயிருக்கேன்னு

ஆருதலு சொன்னவளோ..


✍'கைநாட்டா'ன்னு

கணக்கெடுக்க

வந்தவக ஏளனமா

கேட்டாகன்னு

'இங்கிலிசு படிசுபுட்டு

எம்புள்ள 

கவுருமன்டு கலக்டராவான்'னு

சந்திவீரன் சாமி

சாம்பளபூசி

சத்தியசெஞ்சவளே..


✍ஆத்தாளுக்கு ஒருநாளு

*அன்னையர் தின* முன்னு

அகிலம் கொண்டாடுது.

ஒறக்கங்காணாது

ஓருயிரு தீண்டாது

ஓயாம காத்தவளே

ஒருநாளு போதுமா?

ஓராயிரம் சென்மம்

வேணுமே 

உம்பேரு

சோல்ல...


🙏த.தாஸ்🙏

அ.உ.நி. பள்ளி,

அனுப்பம்பட்டு.