கொள்கை தான் உயிரென்ற பிம்பத்தை உயர்த்தி
கொள்ளை தான் கொள்கை என்ற எண்ணத்தை மறைத்து
பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி
தகிடுதத்தம் புரிகின்ற தரங்கெட்ட அரசியலை கோபம் கொள்ளாமல் இரசிப்பதும் சுகமே.
வருவேன் நான் என்ற நம்பிக்கை கொடுத்து
வருவானா இவன் என்ற சந்தேகம் கொடுத்து
வந்தாலும் வரலாம் என்று எண்ணவும் வைத்து
வராமல் இருக்கவேண்டும் என்று நினைக்கவும் வைத்து
வந்துவிட்டுப் போகட்டும் என்று சொல்வதும் சுகமே.
இன்றைய நிலையை நேரினில் கண்டு
அன்றைய நிலையை நினைவினில் கொண்டு
தகுந்தவன் தானா என்று சந்தேகப் பட்டு
தகுதி என்ன இருக்கிறது என்று கேள்வியைக்கேட்டு
தகுதியை யார் பார்க்கிறார்கள் என்ற புரிதலும் சுகமே.
தனிமையாய் இருப்பதை சாதகமாய் எடுத்து
சோகங்கள் நிறைந்த திரைப்படம் பார்த்து
நாயகன் நிலையில் தன்னையும் வைத்து
தன்சோகம் தனையே அதனுடன் இணைத்து
தனிமையில் அழுது தீர்ப்பதும் சுகமே.
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி*