*அதுவரை பத்திரமாய் இரு!*
வந்துவிட்டேன் என்கண்ணே!
இரை கொண்டுவந்து விட்டேன் பசியாற!
நிதானமாய்
இன்னும் வெகுதூரம் சென்றிருந்தால்
இன்னும் அதிக
இரை கொணர்ந்திங்கு ஊட்டிடுவேன்!
என்செய்வேன்!
தன்னந்தனியாக உன்னைவிட்டுச் செல்ல மனமில்லாத காரணத்தால் கொஞ்ச தூரத்திலேயே கிடைப்பதை கொத்திக் கொண்டு வந்துவிட்டேன் உன்வாயில் ஊட்ட!
இது உனக்குப் போதாது! பயப்படாதே!இதோ இன்னும் நான் பறந்துச் சென்று உன்பசிதீர பெருந்தீனி கொணர்ந்து வருகிறேன்!ஆனால்
*அதுவரை பத்திரமாய் நீயிருக்கவேண்டுமே!*
வெகுதூரம் நான்பறந்துவரும் ஓசைகேட்டு சட்டென்று தலைநீட்டாதே!
கிட்டத்தில் நான்வந்து உனக்கு அடையாளக்குரல்
எழுப்பிய பிறகேதான் நீ தலையை நீட்டவேண்டும்!
கோட்டான்களும் வல்லூறுகளும் நிறைந்திருக்கும் உலகமடி!
கவனம் சிதறினால் மரணம் நிச்சயமடி!
திரும்பும்வரை என்கவனமெல்லாம் உன்மீதே இருக்கும்.
நீயும் அதுவரை பத்திரமாய்
அடங்கியிரு என்கண்ணே!
*த.ஹேமாவதி*
*கோளூர்*