கையறு நிலையிலே,கண்ணீர் துளிர்த்திட
உதடுகள் துடித்திட, இதயம் படபடத்திட
சென்று வருகிறேன் என்று நீ
சொன்ன அந்த நொடிகள்
சொல்லிவிட்டுச் சென்ற அந்தச் சில நொடிகள்
சற்றே திரும்பி என்னை விரும்பிப் பார்த்த நொடிகள்
மெய்யுருக்கிய நொடிகள்
பொய்யற்ற நொடிகள்.
கண்ணீரைக் காட்டாமல்
இழப்பினை உணர்த்தாமல்
வெறுமையை வெளிப்படுத்தாமல்
சிறிது கூட வெறுக்காமல்
சென்றுவா என் செல்லமே
என்று சொல்லியே அனுப்பிவிட்டு
என்னையும் அறியாமல்
நான் அழுத நொடிகள்
இதயமே தொலைந்ததாய் நான் உணர்ந்த நொடிகள்
மெய்யுணர்த்திய நொடிகள்
பொய்யற்ற நொடிகள்.
*சுலீ. அனில் குமார்*