இசையிலே சிறந்தது உண்மையில் வீணையா?
அதனால் தான் மீட்டுகிறாள்
நாள் தோறும் வாணியா?
வாணியின் கைகளிலே இருப்பது தான் பெருமையா? வாணியவள் மீட்டுவதால் அடைந்தாய் பிறந்த பயனையா?
கருவிகள் பல வந்து உன்னோடு போட்டியா?
உன் பெருமையைக் குலைத்திட திட்டங்கள் தீட்டியா?
வீணையே உன் நாதம் வீணாகிப் போகுமா?
வீணான பல நாதம் உன் நாதம் ஆகுமா?
நாதத்தைத் தாளம் தான் ஈடு செய்தீடுமா?
தாளமும் நாதமும் இராகத்தை மிஞ்சுமா?
எத்தனை கருவிகள் வந்தாலும் புதிதாக
அத்தனையும் உன்னழகுக் கருகில் வர முடியுமா?
புதுமைகள் பல வந்து பழமையை அழிக்குமா?
புதியன புகுவதால் பழையன கழியுமா?
உன் நிலையில் மாறாமல்
நிமிர்ந்து நில் வீணையே
உனக்கு இணை அவனியில் வேறில்லை வீணையே
குழைத்துத் தா இசையுடன் இனிமையெனும் தேனையே
தீங்கேதும் செய்யாத இனிமை எனும் தேனையே.
*சுலீ. அனில் குமார்.*