நஞ்சை நிலம் நிறைந்த தஞ்சையிலோர் அதிசயம்
கல்லிலே கலைவண்ணம் கல்லில்லா ஊரிலே
சொல்லியே முடியாத வியப்பதோ மனத்திலே
பதிலின்றித் தவிக்கிறார் பொறியாளர் இந்நாளிலே.
இலங்கையிலே புத்தர் சிலை காண்கின்றான் சோழன்
அதைவிடப் பெரிதாகக் கனவுகண்டான் ராஜராஜன்
தன் கனவை நனவாக்கினான் அருண்மொழித் தேவன்
சொல்கிறார் கல்கியோ பொன்னியின் செல்வனில்.
ஆதித்த கரிகாலனின் கொலைக்குப் பழிவாங்கினான்,
சேரநாட்டு அந்தணர்கள் உயிரைப் பலி வாங்கினான்,
பிரம்மஹத்தி தோஷம் தீர பெரியோரிடம் வேண்டினான்,
சிவனுக்குப் பெரியகோயில் கட்டி சாபம் போக்கினான்
என்று கூடச் சொல்கிறார்கள் கோயில் கட்டக் காரணம்.
காரணம் எதுவானால் கவலை ஏது பிறர்க்கு
கிடைத்ததன்றோ வியக்கவைக்கும் கோயிலொன்று நமக்கு
இன்னும் கூடப் புரியாத புதிராகப் பலர்க்கு
போற்றவேண்டும் தலைமுறைகள் அது தான் மதிப்பு அதற்கு
அது தான் பெருமை நமக்கு.
*சுலீ. அனில் குமார்.*