புன்னை மரம் சாட்சியாக
புன்னகையோ காட்சியாக
மன்னவனோ கைபிடிக்க
மங்கையவள் நாணி நிற்க;
என்னவளே என்றவனை ஏறெடுத்துப் பார்த்தபின்னே
கண்ணாளா என்றவளின்
கால் விரலோ கோலமிட;
அனுமதி தான் என்று எண்ணி
அணைக்கத் தான் முயன்றிடவே
தடையாக நின்றதங்கே தையலவள் வளைக்கரங்கள்.
முடியாத முயற்சியது முடிவல்ல என்றுணர
கடியாத கண்களினால்
காரணத்தைத் தேடி நிற்க;
மடியாத பண்பதனை மதித்து நின்ற மங்கையவள்
மணம் முடிக்கும் நாளுக்காய் காத்திருக்கும் நிலை விளக்க;
களவிலே கூட ஒழுக்கத்தைப் பேணி நின்ற
காதலதை நினைக்கையிலே கண்களிலே இருதுளிகள்.
'இந்தாம்மா பால்' என்ற குரல் கேட்டு நான் விழித்து
கனவா கண்டதெல்லாம் என்று நானும் விழி சுழற்ற;
கனவாக இருந்தாலும் களவொழுக்கம் கற்பித்த
கற்பு நெறி கண்டு நானும்
கனவுக்காய் மகிழ்கின்றேன்.
*சுலீ. அனில் குமார்.*