அகன்ற ஆகாயமும் நீலநிறம்!
அந்த ஆழ்கடலும் நீலநிறம்!
ஆகாயம் இருப்பது மேலே
ஆழ்கடல் இருப்பதோ கீழே!
வானத்தின் எல்லையை அறிந்தவர் யார்?
அந்த கடலின் ஆழத்தை அறிந்தவர் யார்?
வானத்தைத் தொட்டவரும் இல்லை!கடலின் அடிமடியைத் தொட்டவரும் இல்லை!
விண்மீன்கள் வானத்தில் கொட்டிக்கிடக்க
துள்ளும்மீன்கள் கடலிலே நிரம்பியிருக்கும்!
ஆகாயவிமானங்கள்
வானவீதியிலே பறக்க
கப்பல்கள்தான் கடல்வழியில் பயணிக்கும்!
நிலவும் கதிரும் வானின் செல்வங்களென்றால்
முத்தும் சங்கும் கடலின் செல்வங்கள்!
கடல்நீர்த்துளிகளைத்
தானம்தரும்!
பெற்றுக்கொண்ட வானமோ அவற்றை மழையாகத் திருப்பித் தரும்!
சினந்தால் இடியோசை எழுப்பி
பேய்மழைக் கொட்டும் வானம்!
சினந்தால் ஆழிப்பேரலையாய்ப்
பொங்கி ஊருக்குள் வந்து நாசப்படுத்தும் கடல்!
காற்றோடு உறவாடி
முகில்களை அங்குமிங்கும் ஓடவைப்பது வானம்!
காற்றோடு உறவாடி அலைகளை உண்டாக்கி கரைத்தொட வாஞ்சையாய் ஓடிவருவது கடலாகும்!
உலகமே கூடினாலும் வானத்தை மூடமுடியாது!
அதுபோலவே கடல்நீரையும் இனிப்பாக்க முடியாது!
த.ஹே
கோளூர்