அன்பை முழுதும் நெஞ்சினுள் இருத்தி
அன்பே இல்லை என மனைவியிடம் வருத்தி
அன்பை உணர்ந்தவள் பொய்க்கோபம் தன்னை
அன்புடன் இரசிப்பது வாழ்வினில் சுகமே.
இல்லாத காதலியை இருப்பதாகக் காட்டி
சொல்லாத வார்த்தைகளை சொன்னதாகச் சொல்லி
பொல்லாத பிள்ளை இவனெனப் பிறரைச்
சொல்ல வைத்துப் பார்ப்பதும் சுகமே.
உணர்ச்சியை வார்த்தையில் பிழம்பாய் புகுத்தி
உள்ளத்து வேட்கையை கள்ளமின்றி உணர்த்தி
சொல்லில் மட்டும் தான் என்று தெரிந்தும் கூட
சொன்னதால் கிடைக்கும் அமைதியும் சுகமே.
படிக்காத உன்னைப் பிடிக்காதடா என்று
அடிப்பது போல் கோபமாய் கையையும் நீட்டி
அடித்ததால் வலித்ததாய் அவன் நடித்துக்காட்டி
நடிக்காத நடிகனை நேரிலே கண்டு
மகிழ்ச்சியை மனத்தினில் இரசிப்பதும் சுகமே.
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*