Header Ads Widget

Responsive Advertisement

படித்ததில் பிடித்த கவிதைகள்

...எனக்குப்பிடித்த கவிதைகள் :

1. "ரேசன் கடைக்காரருக்கு
குழந்தை பிறந்தது....
எடை குறைவாக...!"

2. "வராந்தாவிலேயே
இருந்த
வயதான தந்தை....

இறந்த பின்
ஹாலுக்குள் வந்தார்
புகைப்படமாய்...!"

3. “வீட்டின் பெயரோ
அன்னை இல்லம்..!

அன்னை இருப்பதோ
முதியோர் இல்லம்..!”

4. " புறாக்கள் வளர்க்கும்
எதிர் வீட்டுக்காரர்
என்னிடமிருந்து பறிக்கிறார்
பூனை வளர்க்கும்
சுதந்திரத்தை...."
- நா. முத்துக்குமார்.

5. " பறித்த மலரை
ஆண்டவனுக்குச் சூட்டினாலென்ன?
கல்லறையில் வைத்தாலென்ன?

மலருக்கென்னவோ
பறித்ததுமே வந்துவிட்டது
மரணம் ! "

6. “சர்க்கரை இல்லை...
கொழுப்பு இல்லை...
எஜமானரோடு
வாக்கிங்
போகுது
ஜிம்மி...!”

7. "வேலிக்கு வெளியே
தலையை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே...!

வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்...?"
-- மு. மேத்தா.

8. "ஒவ்வொரு முறையும் அவன் அவளை
பிறந்த வீட்டுக்கு அனுப்பும் போதெல்லாம்
திரும்பவும் அவர்களை
ஒன்று சேர்த்து வைக்கிறது
ஹோட்டல் சாம்பார்!"
-S. செல்வகுமார்

9. "பேருந்தில்
சிதறுகிறது நாணயங்கள்....
தேடலுக்குப்பிறகு
கிடைத்தன....
சில நாணயங்கள்
தொலைந்தன...
சிலர் நாணயங்கள்...!"
-ப. உமாமஹெஶ்வரி.

10. "கோழித்திருடனை
ஜெயில்ல போட்டாங்க...
ஜெயில்ல அவனுக்கு
கோழிக்கறி போட்டாங்க..!"
- ஒப்பிலான்.

11. "மாங்கல்யத்தின் மகிமையை
மனைவி அறிவாள் …
மணவாளன் அறிவான் …
அவர்கள் இருவரையும் விட
மார்வாடியே
அதிகம் அறிவான்...!'
-- கவிஞர் தமிழன்பன்.

12. "காற்றில் பறந்து
பறவை மறைந்த பிறகும்
கிளை தொடங்கிய
நடனம் முடியவில்லை !"