வந்தவர் யாரென்று புரியவில்லை,
எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை,
எதற்காக வந்தார் என்றும் சொல்லவில்லை,
பதறித்தவிக்கிறது ஒரு தாய்மனம்.
எவனோ ஒருவன் அனுப்பிவைத்தான்,
எவரோ இருவர் வந்து நின்றார்,
பெட்டியுடன் புறப்பட்டாள் பெற்றமகள்,
பதற்றத்துடன் தடுக்கிறது பெற்றமனம்.
நிலைகுலைந்தாள் தாக்குதலில்
தடுக்கமுயன்ற தாயவள்,
கத்தியால் குத்தப்பட்டாள்
காது குத்தி மகிழ்ந்தவள்,
பாலூற்ற வைத்துவிட்டாள்
தாய்ப்பால் குடித்து வளர்ந்தவள்,
படுகொலையை அரங்கேற்றினாள்
காதலில் விழுந்தவள்.
கட்டியவனைக் காவு வாங்கி,
பெற்றவரைச் சிறைக்கனுப்பி,
இன்னொருவனை இனிதே மணந்து
மகிழ்ச்சியிலே திளைக்கிறாள்
இன்னொருவள் மறுபுறம்.
கட்டிக் காத்த கலாச்சாரம் கண்கலங்கி நிற்கிறது,
நாகரீகம் முன் வந்து காவு வாங்கி மகிழ்கிறது,
பிள்ளைகளால் பெற்றவரைக்
கொலைசெய்ய வைக்கிறது,
பெற்றவரைப் பிள்ளைகளைக்
கொலைசெய்யவும் வைக்கிறது.
எங்கே செல்கிறோம் நாம்?
எங்கு போய் நிற்போம் நாம்?
தெரியவில்லையே இறைவா.....!
சுலீ அனில் குமார்
கே எல் கே கும்முடிப்பூண்டி.