கஜாவே கடலுடன் தானே உறவாடிக் கொண்டிருந்தாய்

பின் உனக்கேன் நிலத்தின் மீது மோகம்

ஒரு முறை  நீ  கரையைக் கடந்து வந்தாய்

எம் மக்களை கரையேற முடியாமல் செய்து விட்டாயே!

நீ அவர்களை கற்காலத்திற்கு இட்டுச் சென்றாயோ

முற்காலத்திற்கு இட்டுச் சென்றாயோ

அவர்கள் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கி விட்டாயே

மரங்களுக்கும் உனக்கும் யார் பலசாலி என்ற போட்டியா என்ன?

நீ வென்று அவர்களை வீழ்த்தி விட்டாயே!

தென்னைமரங்கள் அசைந்து அசைந்து உன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டனவென்று அவைகள் மீது கோபமா என்ன?

அவைகளை மண்ணோடு மண்ணாய் மாய்த்துவிட்டாயே!

மின்கம்பங்களும் அலைபேசி கோபுரங்களும் நீ போகும் வழியை தடுத்தார்களென்றா அவைகளை சாய்த்துவிட்டாயே!

நீ எங்களை அழிக்க நினைத்தாய் 

நீயே அழிந்து போனாய்

மற்றவருக்கு கெடுதல் நினைத்தால் அழிவு நமக்கு என்பதை உணர்த்தியதற்கு நன்றி

உன்னை  அனுப்பியவரிடம் போய் சொல்

தமிழன்வெட்ட வெட்ட வளருவான்

குட்ட குட்ட உயருவான் என்று சொல்


தி.பத்மாசினி