தங்குற்றம் களைவதோடு பிறரின் குற்றம்
.......தகர்த்தெறிந்து தந்திடுவார் தெளிவை யார்க்கும்!
மங்காத செல்வமான கல்வி தன்னை
......மனமுவந்து மாணவர்க்குத் தருவார் நன்று!
செங்கதிராய் அறியாமை இருளை மாய்ப்பார்!
...... செம்மையாக மாணவரை நடத்திச் செல்வார்!
கங்குகரைக் காணாத கடலாய் என்றும்
......கற்றலைத்தான் தொடர்ந்திடுவார் விரும்பி நாளும்!
(1)
கொழுகொம்பாய்த் தாங்கிடுவார் சீடர் தம்மை!
......கல்விக்கும் மாணவர்க்கும் பற்றுக் கோடாய்!
அழியாத செல்வத்தைப் பேத மின்றி
......அனைவருக்கும் அன்னையாக வழங்கு வாரே!
எழுபிறப்பும் தொடர்கின்ற கல்விச் செல்வம்
.......எவருக்கும் தருபவர்யார் இவரே யன்றோ?
விழுச்செல்வம் கல்விதனைப் பயிற்று வித்து
.......விழிதந்து வழிகாட்டும் தெய்வ மாவார்!
(2)
த.ஹேமாவதி
கோளூர்