பிறக்கும் உயிர்கள் அத்தனைக்கும் வாழும் உரிமை உண்டன்றோ?
ஒருவர் உரிமையை மற்றவர் பறிப்பது
உண்மையில் மாபெரும் தவறன்றோ?
மனிதர் தம்முள் பேதமை பார்த்து
பிரிவினை வளர்ப்பது பாவமன்றோ?
சாதிக்கொரு நீதியெனில் மனிதம் மண்ணில் செழிப்பதென்றோ?
இயற்கை யாவும்
மனிதருக்குப் பொதுவுடைமை!
அதிலும் பிரிவினை
உண்டாக்கி வேதனை வளர்ப்பது மனிதனின் தனியுடைமை!
பிறந்த இடத்திற்கேற்ப
உண்ணலும் உறங்கலும் வாழ்வதற்கு அடிப்படையாய்த் தொழிலாற்றுதலும்உடுத்தலும் கலைபல ஊறித்திளைத்தலும்
அவரவர் உரிமையன்றோ?
தாய்மொழி என்பது
மனிதனின் உயிர் உரிமைசாசனம்
ஒருவன்மொழியை மற்றவன் அழிக்கநினைப்பது
கொலைப்பாதகம்!
மொழியை மதிப்போம்!மதம் இனம் சாதியைக் கடப்போம்!இயற்கையைப் போல அனைத்தையும் பொதுவுடைமையாக்குவோம்!
சமய உரிமை யாவருக்கும் சொந்த உரிமை!
கல்விச்செல்வம் பெறுவதற்கும் உண்டு இங்கே யாவருக்கும் உரிமை!
மனிதர் உரிமையை மனிதர் பறிக்கும்
வழக்கம் இங்கே வேண்டாமே!
யாவருமிங்கே ஓரினமென்று மகிழ்ந்து வாழ்வோமே!
த.ஹேமாவதி
கோளூர்