வெண்மேகத்தின் வெண்மை
நீலவானமதிலே
ஆங்காங்கே
சிறு சிறு மலைக் குன்றுகளாயும்
கோலமிட்டு வைத்தாற் போலவும் அழகாய் காட்சி அளிக்கும் வெண் மேகமே
வேகமாக எங்கே செல்கின்றீர்கள்
யாரைக் கண்டு பயந்து ஓடுகின்றீர்கள்
பூமியிலிருந்து வரும் நச்சுப் புகை தான் காரணமோ
சிலநேரம் ஆகாய மங்கைக்கு அழகாய் வகிடெடுக்கின்றாய்
சூரியனோடும் சந்திரனோடும் கண்ணாமூச்சியும் ஆடுகின்றாய்
ஓ... வெண்மேகமே நீ என்ன மந்திரவாதியா இல்லை
கண்கட்டும் வித்தைக்காரனா
உம்மைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் காட்சியளிக்கின்றாய்
கற்பனை வளத்தைத் தூண்டியும் விடுகின்றாய்
கவிஞர்களுக்கு கருப் பொருளும் ஆகின்றாய்
நீயும் காற்றும் ஒன்றோ
இருவரையும் கையால் பிடிக்க முடியவில்லையே
நிறம் மாறாமல் உருமாறும் வெண்மேகமே
போகிற போக்கில்
மக்களுக்கு உருமாறினாலும் தன் தன்மை மாறா நிலையை சொல்லிவிட்டுச் செல்
தி.பத்மாசினி சுந்தரராமன்