கொள்கை முடிவு என்ற பேரில் கொள்ளை முடிவு எடுப்பவர்கள் எள்ளி நகையாடப்பட வேண்டுமென்று நினைத்தால்,
வாழ்வாதாரத்தை அழித்து வளங்களை எல்லாம் தொலைத்து தான் வாழ வழிகாண்பவர் ஒழியவேண்டுமென்றால்,
அன்னைபூமியின் செல்வத்தை
அன்னிய நாட்டவரிடத்தில்
பாதகாணிக்கை வைப்போர் பணியவேண்டுமென்றால்,
எளியோனின் கோவணத்தை ஏமாற்றி வாங்கி
வலியோனின் வயிற்றை நிரப்புவோர் தமையே
பதில் சொல்லவைக்க நீ விரும்புவாய் என்றால்,
கல்வியை வெறும் ஒரு கடைச்சரக்காக்கி
கற்போரை ஓட்டுபோடும் எந்திரமாக மாற்றி
களிப்புடனே அலைபவரை உணரவைக்க நினைத்தால்,
காமத்தைத் தங்கள் கண்ணிலே வைத்து
நியாயத்தைத் தமது சொல்லிலே வைத்து
பாவச்செயல் செய்பவர்கள் பரிகசிக்கப்பட்டு
கைகட்டி வாய்பொத்தி நிற்கவேண்டுமென்றால்,
விடியலில் எழுந்து நீ ரௌத்திரம் பழகு,
விழித்திருந்து நீ ரௌத்திரம் பழகு,
விடியும்வரை நீ ரௌத்திரம் பழகு.
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி*