கங்கை இங்கே வரவேண்டும் குமரிக்கடலைத் தொடவேண்டும்
சொன்னார் ஒருவர் அந்நாளில்
அது தான் தேவை இந்நாளில்.
பள்ளிக்கூடம் திறந்திடுவோம்
இலவசக்கல்வி அளித்திடுவோம்
நடத்திக்காட்டினார் அன்றொருவர்
நாடே வியந்து பார்த்ததன்று.
மழைநீர் தனையே சேகரிப்போம்
நிலத்தடி நீரை உயர்த்திடுவோம்
ஆணை இட்டார் ஒருவரன்று
தொடர்ந்திருந்தால்... சரித்திரம் இன்று.
பசியால் இறப்பைத் தடுத்திட வேண்டும்
நூறு நாள் வேலை கொடுத்திட வேண்டும்
அடிப்படைக் கூலி கிடைத்திட வேண்டும்
துவங்கிய திட்டம் நூறு நாள் வேலை.
திட்டம் அனைத்தும் தொலைநோக்காக
தீட்டினார் பலரும் தொலைநோக்கோடு
நடக்கிறது அனைத்தும் விளையாட்டாக
நடைமுறையில் வெறும் கேலிக்கூத்தாக.
ஒருசிலர் இருப்பார் தொலைநோக்கோடு
பலர் இங்கு இன்றும் தொல்லை நோக்கோடு
சேவையென்று சொல்வார் சில நோக்கோடு
அது தானே என்றும் வெட்கக்கேடு.
பூமியின் வளங்களை அழித்தாகி விட்டது
வாழ முடியா நிலை வந்து விட்டது
சந்திரனைச் செவ்வாயை நினைத்தாகி விட்டது
தொலைநோக்கு தொலைவை நோக்கியாகி விட்டது.
*சுலீ. அனில் குமார்*